17 suthumali flood eng

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில் நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும் உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

வெள்ளநீர் இயற்கையாகச் சென்று தேங்கக்கூடிய வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களைத் தூர்வாருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதுமலைப் பகுதியில் வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள் தாமதமின்றி ஆரம்பிக்கப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகளும் நிலைமைகளின் அடிப்படையில் தொடர்ந்து அடுத்தகட்டமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.