3 rural ex sin

பெண்களிடமும் இளையோரிடமும் ஏற்கனவே காணப்படும் திறமைகள் வெறுமனே காட்சிப்படுத்தப்படும் திறமைகளாக மட்டுப்படாமல், வருமானம் ஈட்டும் தொழில்களாகவும், நிலையான வாழ்வாதாரங்களாகவும், எதிர்காலத்தில் பிறருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முயற்சிகளாகவும் வளர வேண்டும். பயிற்சியின் உண்மையான வெற்றி சான்றிதழ் பெறுவதில் அல்ல, அந்தப் பயிற்சியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையிலும் குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் ஏற்படும் மாற்றத்திலேயே உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கண்காட்சி – 2026 இன்று (02.09.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் ஆரம்பமானது. இக்கண்காட்சி நாளையும் (03.09.2026) தொடர்ந்து நடைபெறவுள்ளது.

கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை விட அவற்றின் பின்னாலுள்ள உழைப்பு, குடும்பங்களின் கனவுகள் மற்றும் குறிப்பாக பெண்களின் தன்னம்பிக்கையுடன் வாழ்வை முன்னெடுக்கின்ற முயற்சிகளே தமக்கு முக்கியமானதாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார். கிராம அபிவிருத்தி என்பது ஒரு வீதி அமைத்தல், கட்டடம் அமைத்தல் அல்லது ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்குதல் மாத்திரமல்ல் ஒரு கிராமத்தின் மனித வளத்தை அதன் வலிமையாக மாற்றுவதே உண்மையான கிராம அபிவிருத்தி என அவர் தெரிவித்தார்.

மணமகள் அலங்காரம், கேக் தயாரித்தல், தையல், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல திறன்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுக்குள் கற்றுக்கொள்ளப்பட்ட சாதாரண திறன்களாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இன்றைய சூழலில் அவற்றை வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் தொழில்களாக மாற்றிக்கொள்ள முடியும் என்றார். குறிப்பாக பெண்கள் குடும்பப் பொறுப்புகளையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டே வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் பெருகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிராம அபிவிருத்தித் திணைக்களம் பெண்கள் அபிவிருத்தி மையங்கள் மற்றும் பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாக தொழில்சார் பயிற்சிகள், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை உருவாக்கி வருவது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இம்முயற்சிகள் இன்னும் ஒரு படி முன்னேற வேண்டும் என்றார். பயிற்சி வழங்கினோம் என்பதுடன் பணிகள் முடிவடையாமல், பயிற்சிக்குப் பின்னர் சந்தை, வாடிக்கையாளர், தரம், பொதியிடல் மற்றும் விற்பனை வாய்ப்புகளுடன் பயிற்சியாளர்களை இணைக்கும் முழுமையான அணுகுமுறை உருவாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இக்கண்காட்சி மூலம் வெளிப்படுத்தப்படும் திறமைகள் இன்றைய நிகழ்வுடன் முடிவடையாமல், இன்றைய திறமை நாளைய தொழிலாகவும், இன்றைய சிறிய வருமானம் நாளைய நிலையான வருமானமாகவும், ஒருவரின் சுயதொழில் நாளைய பலருக்கான வேலைவாய்ப்பாகவும் மாற வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என ஆளுநர் தெரிவித்தார்.

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கஜனி பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் சிறப்பு விருந்தினராகவும், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர். மேல் மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் தினேஷh குமாரி ராஜபக்ச வளவாளராகக் கலந்துகொண்டார்.

கண்காட்சியில் பெண்கள் மற்றும் இளையோரின் திறன்களை பிரதிபலிக்கும் கைவினை மற்றும் சுயதொழில் சார்ந்த பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.