ஆசிய அபிவிருத்தி வங்கியின் வடக்கு மாகாணத் திட்டங்களைப் பார்வையிட வந்த ஊடகக் குழு ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நீர் வழங்கல் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் பெறுபேறுகள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஊடகப் பயணத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் அழைத்து வரப்பட்ட ஊடகக் குழுவினர், மாகாணத்தின் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுடன் கலந்துரையாடினர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் ஊடகப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் உள்நாட்டு அச்சு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் இன்று (24.08.2026) திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.

இலங்கையில் நீர் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் துறைகளில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பையும், குறிப்பாக வறுமையைக் குறைத்தல், பிராந்திய சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இத்திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

தாளையடியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை நன்னீராக்கும் திட்டம், தீவகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தொடர்புடைய நீர் முயற்சிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் சிறிய, நடுத்தர தொழில் முயற்சி நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்களைப் பார்வையிடும் வகையில் ஊடகக் குழுவின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்களின் நடைமுறைப் பெறுபேறுகள் மற்றும் பயனாளர்களின் அனுபவங்களை நேரடியாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களின் மூலம் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் ஆளுநரும் ஊடகக் குழுவினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். மாகாணத்தின் நீர் வளம், குடிநீர் பாதுகாப்பு, விவசாயம், தொழில் முயற்சிகள் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடுகள் தேவைப்படுவதும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிக்குழுவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், முதன்மை திட்ட அலுவலர், மூத்த தொடர்பாடல் அலுவலர், நிதித்துறை அலுவலர் மற்றும் திட்ட உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவும் உள்நாட்டு அச்சு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.