யாழ்ப்பாணம் வலயக்கல்வி அலுவலகத்தின் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு – 2021

வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாண வலயத்துக்குரிய மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 10.10.2022 அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களும் ஏனைய அதிதிகளாக யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடரீதியான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு மாணவர்களின் இசை வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றும் வைபவமும் மற்றும் இறைவணக்கம் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து யாழ் வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பாகவுள்ள பிரதிக்கல்விப் பணிப்பாளர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் யாழ் இந்து மகளிர் மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது.

தொடர்ந்து அதிதிகளின் உரைகள் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றன. தேசிய மட்டத்திலான பரீட்சையில் தோற்றி மாவட்ட மட்டத்தில் முதல்நிலை இடங்களினைப் பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் 2021 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் புலமைப் பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்று முதல் நிலையினைப் பெற்ற யா/கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் த.கஜலக்சனை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றன. இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் 126 மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டிருந்தார்கள்.

2021 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 12 ஆயிரத்து 388 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் 8085 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றிருந்ததுடன் அவர்களில் 412 மாணவர்கள் அதிவிசேட சித்தியை பெற்றிருந்தனர். அவர்களுள் யாழ் வலயத்தில் 126 மாணவர்கள் அதிவிசேட சித்தியினைப்; பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு மாணவர்களும் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்ற சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். சமூகத்தை வழிநடத்தி முன்னுக்கு கொண்டு வருகின்ற ஒருவராக நான் உங்களைப் பார்க்கின்றேன் எனவும், சிந்தனைகள் குறுகிய மனநிலையில் இருக்காது எல்லையில்லாத உயர்ந்த நிலையை அடைய திடகாத்திரமான நல்ல மனப்பாங்கோடு சமூகத்தை கொண்டு செல்லும் மனநிலையில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மாணவர்கள் சிறந்த புத்திசாலிகள். இம்மாணவர்கள் நாட்டின், பிரதேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உயர் பதவியிலே இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் அதற்கென மாணவர்கள் ஒரு துறையில் மட்டும் இருக்காமல் பல் துறையில் வல்லவர்களாக மிளிர வேண்டும் எனவும் அப்படி இருந்தால் தான் எதிர்காலத்தில் நாட்டிற்கு நல்லது செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 2021 ஆம் ஆண்டு வட மாகாணம் இலங்கையின் கல்வியில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமைக்கு நன்றி கூறுவதாகவும், இந்த காலத்தில் மேலதிகமாக ஆங்கிலம், கணனி மற்றும் சிங்களம் என்பவற்றை மாணவர்கள் கற்க வேண்டும். அறிவைப் பெறுவதுடன் நற்சிந்தனை மனோபாவம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அதற்காக சமூகத்தில் நல்ல வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் கற்கை நெறியினை மாணவர்கள் தெரிவு செய்தல் வேண்டும் எனவும் எதிர்காலத்தில் மாணவர்கள் உயர் பதவி வகித்தாலும் வட மாகாணத்தில் சேவை செய்ய வேண்டும் எனவும் இந்த மாகாணத்தையே பொறுப்பேற்கின்ற ஒரு சந்ததியினராக காணப்பட வேண்டும் எனவும் மாணவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார். மேலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான கட்டுரைகளை தனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் என குறிப்பிட்டதுடன் ஒழுக்கம் தான் வாழ்க்கை எனவும் பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் எனவும், அதற்காக பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களின் ஒழுக்கத்தினைப் பேணுவதுடன் பாடசாலையில் மட்டுமல்ல குடும்பங்களிலும் பெரியோர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

இவ்வாறாக இந்நிகழ்வானது அதிதிகளின் உரைகள் மற்றும் மாணவர்களுக்கான கௌரவிப்புக்களுடன் யாழ் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல் பிரிவு திருமதி தர்மிகாவின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.