10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், அதன் ஊடாக தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில், 764 மற்றும் 769 வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் சங்கங்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30.04.2025) இடம்பெற்றது.
764 வழித்தட பேருந்துச் சேவையை பலாலி வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது என்றும், 769 வழித்தட பேருந்துச் சேவையை காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது எனவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதுவரை காலமும் 769 வழித்தட சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்துகள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி, காங்கேசன்துறை வீதி வழித்தடத்தின் வழியாக வரும் மாணவர்களை மாத்திரம் காங்கேசன்துறை சந்தியிலிருந்து 764 வழித்தட பேருந்துகள் இலவசமாக ஏற்றிச் செல்லும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை மக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு சேவையின் தேவைகருதி தற்காலிகமாக, காங்கேசன்துறையிலிருந்து 769 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மாவிட்டபுரம் சந்தியிலிருந்து கீரிமலை பேருந்து தரிப்பிடம் சென்று திரும்பும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன்போது 769 வழித்தடத்தில் கடந்த காலங்களில் கீரிமலை வரையில் சேவை முன்னெடுக்கப்பட்டதையும் தற்போதைய சூழலில் கடற்கரையோர பாதை மூடப்பட்டிருப்பதையும் கருத்திலெடுத்து இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன், யாழ். பிராந்திய கூட்டணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத் தலைவர், யாழ். மாவட்ட தூரசேவை பேருந்து சங்கத் தலைவர், 764 மற்றும் 769 வழித்தட பேருந்து சங்கத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.