வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல்கள் நாளை செவ்வாய்க்கிழமை (24.02.2026) முதல் மூன்று கட்டங்களாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் பிரசுரிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றத்துக்கான ‘சேவையின் தேவை கருதிய’ இடமாற்றப் பட்டியலில் காணப்பட்ட குறைபாடுகள் சீர்செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய மேன்முறையீட்டுச் சபையூடாக மேன்முறையீட்டுச் செயற்பாடுகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், சேவையின் தேவை கருதிய திருத்தப்பட்ட புதிய பட்டியலும் (ஆசிரியர் சங்கங்களைத் தவிர்த்து) தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, சேவையின் தேவை கருதிய திருத்தப்பட்ட இடமாற்றப் பட்டியல் நாளை (24), எதிர்வரும் 25ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி என மூன்று கட்டங்களாக இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
அத்துடன், சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றக் கடிதங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதியும், வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துத் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் மார்ச் மாதம் 15ஆம் திகதியும் வழங்கி வைக்கப்படும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான இடமாற்றக் கோரிக்கைகளில், இடமாற்றச் சபையினூடாக 227 விண்ணப்பங்களும், மேன்முறையீட்டுச் சபையினூடாக 90 விண்ணப்பங்களும், காத்திருப்போர் பட்டியலூடாக 51 விண்ணப்பங்களுமாக மொத்தமாக 368 ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சேவையின் தேவை கருதி வழங்கப்படும் இடமாற்றம் தொடர்பில் அதிருப்தியடையும் ஆசிரியர்கள், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் கோவையின் XXஆம் அத்தியாயத்துக்கமைய அந்தத் தீர்மானத்துக்கு எதிராக அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
