வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் மூலம் (PSDG) முன்னெடுக்கப்படும் தலா 18 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதல்கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் 11.06.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநரிடம், வீடுகள் தேவை என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு பாரப்படுத்தப்பட்டு உள்ளூராட்சி அமைச்சால் குழு நியமிக்கப்பட்டு பிரதேச செயலர்களின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு கோரிக்கையும் ஆராயப்பட்டு 14 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு தலா 2 பேரும், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு தலா 3 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதல் கட்டக் கொடுப்பனவான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலையாக பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வின் ஆரம்பத்தில் வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், இம்முறை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி அதிகமாக வழங்கப்பட்டுள்ளமையால் வீட்டுத் திருத்தத்துக்காக 238 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. உங்களுக்கு தலா 18 லட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எந்தவொரு வீட்டுத் திட்டத்திலும் இந்தளவு நிதி வழங்கப்படுவதில்லை. நாம் முதல்முறையாக அதிகளவு நிதியை வீட்டுத் திட்டத்துக்கு வழங்கியுள்ளோம். இதை நடைமுறைப்படுத்த உங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். அதைப்போல வீடுகளை கட்டி முடித்த பின்னர் நீங்கள் அதில் வாழவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது உரையில், உங்களுக்கு சிறிய வீடு அமைக்க நாம் உதவுகின்றோம். அதைப் பெரிய வீடாக மாற்றுவது உங்களின் திறமையில்தான் தங்கியிருக்கின்றது. அதைப்போல எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் வீடுகளை கட்டி நீங்கள் குடியமரவேண்டும். உங்கள் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை எவ்வளவு விரைவாகச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்து அடுத்தடுத்த கட்டக் கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளவேண்டும், என்று குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர், எவ்வளவோ பேர் வீடுகள் தேவையுடையதாக இருக்கத்தக்கதாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அதிர்ஷ;டசாலிகள். விரைவாக வீடுகளைக்கட்டி குடியமரவேண்டும், என்றார்.
வீடுகளைக் கட்டுவதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதுடன், வீடுகளைக் கட்டுவதற்குத் தேவையான மூலப்பொருட்களை காலநேரத்துடன் கொள்வனவு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.