விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் (Sri Lanka Agripreneurs’ Forum – SLAF) ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் (Jaffna Organic Farmer Public Unlisted Company) மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா லிமிடெட் (Agro Benefit Lanka Limited – ABL) ஆகியவற்றுக்கு இடையிலான முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (12.12.2025) மாலை நடைபெற்றது.

புத்தூரில் அமைந்துள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வாழை மற்றும் மாம்பழ சேகரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

எமது விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை அவர்களுக்கான முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்காகக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை நான் முன்னெடுத்து வந்துள்ளேன். அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இன்றைய இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அமைந்துள்ளது.

இது ஒரு பரீட்சார்த்தமான மற்றும் முன்னோடியான முயற்சியாகும். இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வது விவசாயிகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. உற்பத்திப் பொருட்களின் தரத்தைப் பேணுவதன் மூலமும், தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதன் மூலமும் இத்திட்டத்தை நாம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் இங்கு நேரில் வந்து கள நிலவரங்களைப் பார்வையிட்டு, மிகக் குறுகிய காலத்தினுள் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமை பாராட்டுக்குரியது, என்றார் ஆளுநர்.

இந்நிகழ்வில் இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் செயலாளர் கலாநிதி செல்வநாதன் அனோஜன் கலந்துகொண்டு, இத் திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகக் கைச்சாத்திடப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர், யாழ். மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.