வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை (20.12.2025) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்துவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்தாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார்.
இப்பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கு விண்ணப்பித்து, நாளை வரை (16.12.2025) பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் நாளையிலிருந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரையான (19.12.2025) காலப்பகுதியில் அலுவலக நேரத்தினுள் 021 221 9939 என்ற மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப் பிரிவின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெற்றவுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து மறுபக்கத்தில் கோரப்படும் விவரங்களை உடனடியாகப் பூரணப்படுத்திக் கொள்ளுமாறும் முழுமையாகப் பூரணப்படுத்தப்படாத அனுமதி அட்டையுடன் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வருகைதரும் பரீட்சார்த்திகள் எக்காரணம் கொண்டும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எவ்வாறாயினும், மேற்குறித்த பரீட்சை தொடர்பில் யாதாயினும் தெளிவுபடுத்தல்கள் தேவைப்படும் பரீட்சார்த்திகள் 021 221 9939 என்ற மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப் பிரிவின் தொலைபேசி இலக்கத்துடன் மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
