விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல்

பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைகாக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் 29.10.2024 அன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், வலிவடக்கு பிரதேசசபையின் செயலாளர், சிவில் சமுக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு செல்லும் பாதைகள் பற்றைக் காடாக காணப்படுகின்றமையால்  காணிகளுக்கான பாதைகள் பிரதேசசபையால் துப்புரவு செய்து வழங்கப்படும் எனவும் அதன் பின்பு பொதுமக்களின் காணிகள் மாவட்ட செயலத்தால் துப்பரவு செய்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மீளளிக்கப்படுகின்ற விவசாய காணிகளுக்குள் மக்கள் சென்று விவசாயத்தில் ஈடுபடக்கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதன்படி மின்சார வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.