வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்

வட மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது வவுனியா நகர சபை மைதானத்தில் ஜனவரி மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது.

இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 55 விற்பனை கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இதில் வவுனியா மாவட்டத்தில் 56, முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 மற்றும் மன்னார் மாவட்டத்தில் 13 பேர் உள்ளடங்கலாக மொத்தமாக 84 தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை விற்பனை செய்தனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட செயலர், வவுனியா மாவட்டம் மற்றும் செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வட மாகாணம் அகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலர் வவுனியா, வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு மற்றும் வெங்கலச்செட்டிகுளம் ஆகியோரும் கலந்து கொன்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் ஈடுபட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் மொத்த விற்பனை புரள்வானது 2.87 மில்லியன் ரூபா வாகக் காணப்பட்டது சிறப்பம்சம் ஆகும்.