வடமாகாண சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவதானிப்பதற்காகவும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சிறந்த எதிர்காலம் தெரிவதாகவும் பிரித்தானிய அமைச்சர் கூறியிருந்தார்.
இந்தச் சந்திப்பு 12 ஒக்ரோபர் 2023 அன்று யாழ்.நகரில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியனுக்கு ஆளுநர் விளக்கமளித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய அமைச்சர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) அவர்களும் கலந்துகொண்டார்.