வடக்கு மாகாண புதிய ஆளுநர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் 27.092024 அன்று காலை  ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஆளுநரின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதிய ஆளுநரை வரவேற்க உயர் அதிகாரிகள், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். ஆளுநர் செயலகத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் ஆளுநர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வின்போது புதிய கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களுக்கு அரச உயர் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்கள் சார்ந்தவர்கள் பொதுமக்கள் என பலர் நேரடியாக கலந்து கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன் பின்னர் உரையாற்றிய புதிய ஆளுநர் ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்ற வகையில் பொதுச் சேவையில் மக்கள் பெருமைப்படும் வகையில் சேவைகளை வழங்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் அரச உத்தியோகத்தர்கள் சரியான வகையில் எந்த இடையூறுகளும் ஏற்படாமல் சேவையினை வழங்க முடியும் எனவும், பயனாளிகளை தெரிவு செய்யும் போது உண்மையிலேயே சரியானவர்களை தெரிவு செய்து சேவையினை வழங்க முடியும், எனவும் தான் அரச அதிகாரியாக இருந்த காலத்தில் அரசியல்வாதிகளால் பல இடையூறுகளை சந்தித்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறு இடம்பெறாது. அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் சரியான வகையில் சேவைகளை மக்களுக்கு வழங்க முடியும். அரச அலுவலகங்களுக்கு நாடி வரும் பொது மக்களுக்கு விரைவாகவும் நேர்மையாகவும் சினேக பூர்வமாகவும் வினைத்திறன் ஆகவும் சேவையினை வழங்க வேண்டும். மக்களை மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்கு வரவழைக்காமல் ஒரே தடவையில் அவர்களுக்கு உரியவற்றை செய்து கொடுக்க வேண்டும் என பணிப்புரை விடுத்தார். இந்த தருணத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியாக நேர்மையாக விரைவாக பொது மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ஆளுநர் பதவி கிடைத்தமை தொடர்பாக பெருமைப்படவில்லை எனவும், பதவியில் இருந்து மக்களுக்கு மீண்டும் சேவை செய்ய கிடைத்த சந்தர்ப்பம் எனவும் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுவதாக தெருவித்தார். அதிமேதகு ஜனாதிபதிக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதில் பெருமை அடைவதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து ஊழலற்ற தேசத்துக்கான மக்கள் சேவை செய்வதில் பெருமைப்படும் வகையில் அரசியல் தலையீடு இன்றி சேவை வழங்குவதற்கு அவரது கைகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
வடமாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எமது நாட்டை சிறப்பாக கட்டி எழுப்பிக் கொண்டு செல்வதற்கு நூறு வீதம் ஒத்தாசையாக இருந்து இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு துணை புரிய அனைவரும் அவரது கரத்தை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.