வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (04.04.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான காணிகளை அடையாளப்படுத்தி வழங்குமாறு பிரதி அமைச்சர், ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தொழில்கற்கைகளை நோக்கிய மாணவர்களின் ஆர்வம் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், நெல் கொள்வனவுக்கான வங்கிகளின் கடன் வசதிகளை அதிகரிப்பு தொடர்பாக ஆளுநர் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர், அது தொடர்பில் விரிவாக ஆராய்வதாகவும் குறிப்பிட்டார். விவசாய மற்றும் கடல் உணவுகளின் உற்பத்திகளை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். அதனைப் பிரதி அமைச்சர் ஏற்றுக்கொண்டதுடன், எதிர்காலத்தில் தமது அமைச்சின் ஊடான வேலைத்திட்டங்களை வடக்கில் விரிவாக முன்னெடுப்போம் எனவும் அவர் ஆளுநரிடம் உறுதியளித்தார்.