வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்றங்களை தமது சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்குமாறும், மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நிறுவனமாக மாற்றும் வகையில் செயலாற்றுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
தெருமின்விளக்குகள் பொருத்துவதில் இலங்கை மின்சார சபையுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உள்ள இடர்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதன் பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. அதில் உள்ள சவால்களை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் நடைபெற்றன. உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்திலேயே பணியாளர்களுக்கான சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பணியாளர்கள் வெற்றிடம், இடமாற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சிரேஷ;ட உதவிச் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.