வடக்கு மாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கால்நடை உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பிலான தந்திரோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அதற்கு அமைவாக நீண்டகால நோக்கில் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினர் ஆகியோருடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 24.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவுச் சங்கங்கள் 1970 – 1980 ஆம் ஆண்டுகளில் கோலோச்சியதைப்போன்ற நிலைமை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். கால்நடை உற்பத்தி கூட்டுறவுச் சங்கங்களை வளர்த்தெடுப்பதன் ஊடாக எமது மாகாணத்தின் பொருளாதாரமும் மேம்படும். அதேநேரம், கால்நடை வளர்பாளர்களும் நன்மையடைவார்கள். அதை இலக்காகக்கொண்டே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன், மாகாணப் பணிப்பாளராக 12 ஆண்டுகள் பணியாற்றிவருகின்றேன். முதல் தடவையாக கால்நடை அபிவிருத்திக்காக தனியானதொரு கூட்டம் இப்போதுதான் ஒழுங்கமைக்கப்பட்டு ஆராயப்படுகின்றது. அதற்காக ஆளுநருக்கு நன்றிகளைக் கூறுகின்றேன் எனக் குறிப்பிட்டார். அத்துடன் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் அவசிய தேவைப்பாடுகள் தொடர்பாகவும் அவர் விளக்கினார்.

இதன் பின்னர் கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், சமாசங்களின் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.

சில சங்கங்கள் பால் உற்பத்தியைக் கைவிட்டு தனித்து கால்நடைகளுக்கான மருந்துகளை விற்பனை செய்யும் நிலையங்களாக மாத்திரம் இயங்கி வருகின்றன என்றும் சில சங்கங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டனர். அவற்றை மீளவும் இயக்குவதுடன் சங்கங்கள் அனைத்தும் பால் உற்பத்தியை நிச்சயம் மேற்கொள்ளவேண்டும் எனவும் அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சில பருவகாலத்தில் மேலதிகமான பால் உற்பத்தியை பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றியமைக்கும் உபகரணங்கள் கடந்த காலங்களில் சங்கங்களுக்கு வழங்கப்பட்டும் அவற்றைப் பயன்படுத்தி உற்பத்திகள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இவ்வாறான உபகரணங்கள் பழுதடைந்தால் அவற்றைத் திருத்துவதற்கான திருத்துனர்கள் இங்கு இல்லை என்றும் கூறப்பட்டது.

அதேபோல கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களினதும் அங்கத்தவர்களினதும் நன்மைக்காக சில திட்டங்களை நடைமுறைப்படுத்த முயலும்போது இயக்குநர்சபை, பொதுச்சபை அனுமதிக்கவில்லை என்றுகூறி அதைக் கைவிடவேண்டாம் என்றும் சங்கங்களின் பிரதிநிகளால் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஒரு சிலரது தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஒட்டுமொத்த நன்மையையும் கைவிடமுடியாது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டுறவுத் திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் தவறான வழிகாட்டுதல்களை சங்கங்களுக்கு வழங்குகின்றனர் என்றும், அதேபோல சங்கங்களின் பொதுமுகாமையாளர்களும் சங்கங்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

அதேபோல கால்நடைகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைகளுக்காக ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கு கால்நடைகளை ஏற்றிச் செல்லும்போது நடவடிக்கை எடுக்கும் பொலிஸார், சட்டவிரோதமாக இறைச்சியாக்குவதற்கு கால்நடைகளைக் கொண்டு செல்லும்போது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்போது, கால்நடைகளை சட்டவிரோதமாகக் கொண்டு செல்வோர் காண்பிக்கும் முறையற்ற ஆவணங்களை பொலிஸார் ஏற்றுக்கொள்கின்றனர் என்ற விடயத்தையும் ஆளுநரின் கவனத்துக்கும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் கொண்டுவந்தார்.

கால்நடைகளுக்கான போதிய மேய்ச்சல் தரவைகளும் இல்லை என்ற விடயத்தையும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர். கால்நடை வைத்தியர்களுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பண்ணையாளர்கள் முன்வைத்தனர். கால்நடை வைத்தியர்களின் சேவைகளை ஆகக் குறைந்தது தொலைபேசியூடாகவாவது பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அவர்கள் ஆளுநரிடம் கோரினர்.

தென்னிலங்கையைச் சேர்ந்த பெரு நிறுவனங்களைவிட கூடிய விலைக்கு கூட்டுறவுச் சங்கங்கள் பாலைக் கொள்வனவு செய்யும்போதும் பலர் குறைந்த விலைக்கு தென்னிலங்கை நிறுவனங்களுக்கு பாலை வழங்குவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது. கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் குறித்தளவு பாலையே கொள்வனவு செய்கின்றன என்றும் தென்னிலங்கை நிறுவனங்கள் அவ்வாறில்லாமல் உற்பத்தியாளரால் வழங்கும் பால் முழுவதையும் கொள்வனவு செய்கின்றன என்ற விடயம் தெரிவிக்கப்பட்டது. கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மிதமிஞ்சிய பாலை, பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றினால் அவற்றை விற்பனை செய்வதில் – சந்தை வாய்ப்பை பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றன என்ற விடயமும் குறிப்பிடப்பட்டது. அதேநேரம், தொழில்நுட்ப அறிவும் சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இதன் பின்னர் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கால்நடை கூட்டுறவு உற்பத்திச் சங்கங்கள் ஒவ்வொன்றினதும் அங்கத்தவர்கள் மீளாய்வு செய்யப்படவேண்டும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் அங்கத்தவர்கள் சுயநலமாகச் செயற்படுவதால் பின்னடைவுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இதன்போது, கால்நடை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிகளுக்கு, கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் உற்பத்தியை வழங்குபவர்களையே தெரிவு செய்ய முடியும் என்ற வகையில் உபவிதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் இணைப்பாளரும், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவரும், கூட்டுறவு மேம்பாட்டுக்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்கு முன்னர் இங்கு ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் என்பனவற்றுடன் தொடர் கலந்துரையாடல் நடத்தி அறிக்கை தயாரித்து ஆளுநரிடம் சமர்ப்பித்து அதற்கு அமைவாக நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிட்டார்.