வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழிலிருந்து நாளை காலை 06.25 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படவுள்ள 4082 இலக்க புகையிரதம் காலை 07.43க்கு கிளிநொச்சியையும், வவுனியாவை 09.02க்கும் மாலை 04.00 மணிக்கு கொழும்பை சென்றடையவுள்ளது.

இரண்டாவது புகையிரத சேவையில் 4088 இலக்க புகையிரதம் மாலை 05.40க்கு காங்கேசன்துறையிலிருந்து  புறப்பட்டு யாழ் புகையிரத நிலையத்தை 06.16க்கு வந்தடையும். அங்கிருந்து 06.40க்கு கொழும்புநோக்கி புறப்பட்டு அதிகாலை 04.00 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

இதுவரையில் காங்கேசன்துறையிலிருந்து 06.00 மணிக்கு புறப்பட்டு யாழ் வந்தடைந்து , யாழிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை நாளை முதல் காங்கேசன்துறையிலிருந்து இரவு 07.30 க்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை 08.10க்கு வந்தடையும். மீண்டும் யாழ் புகையிரத நிலையத்திலிருந்து 08.25க்கு புறப்படவுள்ள இந்த புகையிரதம்; அதிகாலை 04.40க்கு கொழும்பை சென்றடையும்.

மேலும், இன்றைய தினம் காலை 08.50 க்கு கொழும்பிலிருந்து ஆரம்பமான முதலாவது புகையிரத சேவை மாலை 06.31க்கு யாழ் புகையிரத நிலையத்தை வந்தடையும். இந்த புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை 03.25க்கும் , கிளிநொச்சி புகையிரத நிலையத்தை மாலை 4.56 க்கும் வந்தடையவுள்ளது.  சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் போன்று இதற்கான கட்டணங்கள் அறவிடப்படும் என்றும் இந்த சேவைகள் மூலம் பணிபுரிவோர் பெரிதும் அனுகூலமடைவர் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரண்டாவது புகையிரத சேவை கொழும்பிலிருந்து இரவு 07.15 க்கு புறப்பட்டு அதிகாலை 04.20 க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

இதுவரையில் கொழும்பிலிருந்து 8.30க்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் இரவு 9.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை காலை 05.04 க்கு வந்தடையவுள்ளது.

கொழும்பு மற்றும் யாழிலிருந்து தினசரி காலை மாலை இடம்பெறவுள்ள இந்த இரண்டு புதிய புகையிரத சேவைகள் பரீட்சார்த்தமாக ஒருமாதம் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய தலைமை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.