யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் 30.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஆளுநர் அவர்கள் உரையாற்றினார். நடப்பு ஆண்டின் மே மாதமும் நிறைவுகின்றது. மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் – வினைத்திறனாகவும் செலவு செய்யவேண்டும். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மாகாண ஆளுநர்களை அண்மையில் சந்தித்திருந்தார். இதன்போது மாகாணங்களுக்கு கடந்த காலத்தைவிட 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளமையைச் சுட்டிக்காட்டியதுடன் ஒரு சதம் நிதியையும் திருப்பி அனுப்பாமல் சரியாகச் செலவு செய்யவேண்டும் என்றும் கோரினார். எனவே இதனைச் செயற்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பைக் கோருகின்றேன், என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கௌரவ அமைச்சர், ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டதைப்போன்று ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் வினைத்திறனாகவும் செலவு செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்கவேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார். மேலும், சில அரச நிறுவனங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன, என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது வீடமைப்பு தொடர்பான விடயம் கலந்துரையாடப்பட்டபோது மணல் விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த காலங்களில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்த சுற்றாடல் குழுவே எந்தப் பகுதியில் மணலை அகழ்வு செய்ய முடியும் என்பதைத் தீர்மானிக்கும். அவ்வாறான இடங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதுடன், போக்குவரத்துக்கான கட்டணத்தையும் சேர்ந்து விலைகளை நிர்ணயித்தோம். இதை மீறுபவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கலாம். ஆனால் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தன்னிச்சையாக செயற்படுவதால் இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதற்கு இணங்குமாக இருந்தால் நடைமுறைப்படுத்தலாம். பாரவூர்தி திணைக்களத்தின் ஊடாக கடந்த காலங்களில் இதைச் செயற்படுத்தியிருந்தோம் எனச் சுட்டிக்காட்டினார் ஆளுநர். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலர், வீட்டுத் திட்டப் பயனாளிகளின் பெயர்ப்பட்டியலை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றார்.
இதன் பின்னர் வடக்கு மாகாண சபையால் யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – கிருபாசுதன் தெளிவுபடுத்தினார். இதன்போது, வடக்கு மாகாணசபையால் கடந்த காலங்களில் ஒரு சதம் நிதியேனும் திருப்பி அனுப்பப்படவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் இயங்குத் புற்றுநோய் மருத்துவமனையை தனியான மருத்துவ நிர்வாக அலகாக நிறுவுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் தனியான கலந்துரையாடல் நடத்துவதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறீபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இ.அருச்சுனா ஆகியோர் பங்கேற்றனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.