முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வயல் விழாவும் விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும்

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் முல்லைத்தீவில் வயல் விழாவும் விதை, நடுகைப்பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் தலைமையில் கடந்த 19.12.2020 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் மற்றும் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த வயல் விழாவில் காளான் உற்பத்தி, பாதுகாப்பு கூடாரத்திற்குள் லீக்ஸ் பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகளை சக்திச்செலவின்றி இயற்கையான முறையில் பாதுகாக்கும் கட்டமைப்பு என்பனவற்றை கௌரவ ஆளுநர் அவர்கள் பார்வையிட்டார் இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிற்கு செத்தல் மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் உற்பத்திக்கு பொருத்தமான அதிக விளைச்சலினை தரக்கூடிய கலப்பின மிளகாய் இனமான MICH Hybrid 1 விதைப்பைக்கற்றுக்களும் முன்னர் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சு என்றும் தற்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச் செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு என அழைக்கப்படும் அமைச்சின் நிதியீட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் பெரிய வெங்காய செய்கையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான பெரிய வெங்காய விதையும் (ராம்பூர் சிவப்பு வர்க்கம்) இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் இறுதியில் கௌரவ ஆளுநர் அவர்கள் பழம்பாசியில் கொய்யா செய்கையினை மேற்கொள்ளும் திரு.சி.பிரபாகர் என்ற விவசாயியின் தோட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இவ்விவசாயி சிறந்த விவசாய நடைமுறைகளிற்கான சான்றுப்படுத்தலுடன் ஐரோப்பிய நாடுகளிற்கான ஏற்றுமதி சான்றிதழையும் பெற்று தனது உற்பத்திகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நடைமுறைகளின் போது இடைத்தரகர்களின் தலையீடுகளை தவிர்க்கும் முகமாக உற்பத்தியினை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினூடாக மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.