மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்ற வடமாகாண ஆளுநர் நடவடிக்கை.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்த திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று 16.10.2023 அன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், சமூகசேவைகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், செயற்றிட்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் சமூகசேவைகள் திணைக்களத்தினரால், மாற்றுத்திறனாளிகளை உள்வாங்குவதற்கான கொள்கையின் வரைபு ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரைபில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வழிகாட்டல், வேலைவாய்ப்பு, அணுகுவசதிகள், சுகாதாரத் தேவைகள், போக்குவரத்து முதலியன சம்மந்தமான விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பாக கேட்டறிந்த ஆளுநர் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு தான் ஜனாதிபதியின் செயலாளரிடம் இது தொடர்பாக எடுத்துக்கூறுவதாகக் கூறியிருந்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் நாம் அதிக அர்ப்பணிப்புடன் வேலைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தார்.