பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்து வரவேண்டும் என்றால் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகள் தொடர்பிலும் கண்காணிப்புடன் இருங்கள். தற்போதைய இளம் சமூகத்தை திசைதிருப்பும் வகையில் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன. அவற்றில் சிக்காமல் உங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என பெற்றோர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
ஏடு நிறுவனத்தால் மாணவர்களுக்கான கற்றல் உதவிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கல்விக்குச் செய்யம் உதவியே மேன்மையானதும் முதன்மையானதுமாகும். ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமாயின் ஒரு கிராமம் அபிவிருத்தியடையவேண்டுமாயின் கல்வியே அடிப்படையானது. அந்த அடிப்படையில் கல்விக்கான உதவிகளை 16ஆண்டுகளாக முன்னெடுத்துவரும் ஏடு நிறுவனம் பாராட்டுக்குரியது. ஏடு நிறுவனத்தை இயக்கும் அணியும் சிறப்பானது.
கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் பலர் செய்யும் உதவிகள் உரியமுறையில் இங்கு கிடைப்பதில்லை. சிலர் ஏமாற்றியிருக்கின்றார்கள். ஆனால் ஏடு நிறுவனம் நம்பிக்கைக்குரியவர்களை இங்கு வைத்து சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
அரசின் எந்தத் திணைக்களமாக இருக்கலாம் அல்லது வங்கிச் சேவைகளாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அங்குள்ள பணியாளர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களும், தட்டிக்கழிக்கும் போக்கும் அதிகரித்துச் செல்கின்றது. ஒரு வசதியும் இல்லாத காலத்தில் சகல இடங்களிலும் மக்கள்நேய வாடிக்கையாளர் சேவை இருந்தது. ஆனால் இன்று எல்லாமே இயந்திரமயப்பட்டு இணையம் ஊடான சேவையாகிய பின்னர் மனித உணர்வு இல்லாமல் மனிதர்களும் இயந்திரமாகிவிட்டனர். அதனால்தான் மற்றவர்களை மதிக்கம் பண்போ, உதவும் எண்ணமோ இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
இதை இங்கு சொல்வதற்குக் காரணம் உண்டு. இன்று இங்குள்ள பிள்ளைகள் நீங்கள்தான் வளர்ந்து பெரியவர்களாகி இந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்யப்போகின்றவர்கள். நீங்கள் உங்களிடம் மற்றவர்களுக்கு உதவும் குணத்தை, இரங்கும் பண்பை, மதிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால், உங்களுக்குத் தெரியாத இடத்தில் நீங்கள் இருக்கும்போதும் கூட உங்களுக்கு ஆயிரம் கைகள் உதவத்தயாராக இருக்கும். அதுதான் இயற்கையின் படைப்பு. நீங்கள் செய்வது உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண திறைசேரியின் பிரதம கணக்காளர் பா.ஜெயராசா தலைமை தாங்கினார். ஏடு ஐக்கிய இராச்சிய கிளையின் இணைப்பாளர் மருத்துவர் அமிர்தலிங்கம் பகீரதன் மற்றும் பாக்கியராஜ் ஆகியோரும், இணைப்பாளர் பா.சோமசுந்தரம் அவர்களும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.






