புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் அம்பலவாணர் கலையரங்கில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் புங்குடுதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்திலிருந்து விருந்தினர்கள் சகிதம் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த நூறு மாணவர்களால் மலர்மாலை அணிவித்து இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் நடைபெற்ற மேடை நிகழ்வில், முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி எனக்கும் இளங்கோவனுக்கும் இலங்கை நிர்வாக சேவை நியமனம் கிடைக்கப்பெற்றது. அன்றிலிருந்துதான் இளங்கோவனுக்கும் எனக்குமான நட்பு ஆரம்பமானது. அப்போது நாங்கள் இளைஞர்கள். நானும் இளங்கோவனும்தான் ‘ஒரே செட்’. ஒன்றாக துவிச்சக்கர வண்டியில் பல இடங்களுக்கும் சுற்றியிருக்கின்றோம்.
நாங்கள் அன்று துவிச்சக்கர வண்டியில்தான் பணியிடங்களுக்குச் சென்றோம். அதுவும் உரிய நேரத்துக்கு அலுவலகத்துக்குச் சென்றோம். இன்று பல வசதிகள் கிடைத்தமையால் என்னவோ, பல அரசாங்கப் பணியாளர்கள் 9 மணிக்குத்தான் அலுவலகங்களுக்குச் செல்கின்றார்கள்.
இளங்கோவன் மிக எளிமையான ஒருவர். அவரை யாரும், எந்த நேரத்திலும் அணுக முடியும். அன்பாக கதைக்கும் ஒருவர். எல்லோருடனும் உரிமையுடன்தான் கதைப்பார். நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு இருக்க வேண்டிய விரைவாகவும் சரியாகவும் தீர்மானம் எடுக்கும் திறன் அவரிடம் அதிகமாகவே இருந்தது. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய அவர் எப்போதும் சுற்றறிக்கைகளைப் பார்த்து தடைபோடுபவர் அல்ல. அதைப்போல அவரிடமிருந்து எப்போதும் செய்ய முடியாது என்ற வார்த்தை வராவது. செய்வோம் என்ற நேரிய சிந்தனைச் சொல்தான் அவரின் வாயிலிருந்து வரும்.
எங்கள் மக்கள் என்ற உரிமையுடன் அவர்களுக்கு எப்போதும் உதவி செய்யும் சிந்தனையுடன்தான் அவர் இருந்தவர். இனியும் இருப்பார். அவர் பல்வேறு பதவிகளை வகித்தவர். அவர் அந்தப் பதவிகளில் இருந்தமையால்தான் அந்தப் பதவிகள் மக்கள் மயமாகின. இப்படிப்பட்ட ஒருவர் இன்று தனது அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் எங்கள் மக்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. அவரது ஓய்வுகாலம் சிறக்கவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை பிரதேச செயலர், பளை பிரதேச செயலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.