தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

2021 ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 27 ஏப்பிரல் 2021 அன்று காலை 9மணிக்கு நாகதீப ரஜமகா விகாரையில் இடம்பெற்றது. இதில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி நவதகலபதுமகீர்த்தி தேரோ அவர்களும் வெசாக் பண்டிகை நடாத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள் , ஒழுங்கமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந் நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் , ஆளுநரின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் நயினாதீவு பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த சில வாரங்களாக தேசிய மற்றும் மாகாண ரீதியில் நடைபெற்ற தேசிய வெசாக் பண்டிகைக்கான கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னேற்பாடுவேலைகள் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலைகளின் கள நிலவரத்தை ஆய்வு செய்த கௌரவ ஆளுநர் அவர்கள் , தலைமை விகாராதிபதியை சந்தித்து மேலதிக ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்தாலோசித்தார்.