தேசிய மீலாதுன் நபி விழா – கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

‘மனிதகுலத்துக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் மகத்தான பொருளை நினைவுகூரும் புனிதமான நாளாக மீலாதுன் நபி தினம் அமைகிறது.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பையும், அவர்களின் உயரிய வாழ்வியல் நெறிகளையும் நினைவுகூரும் இந்நன்னாளில், வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கு எடுத்துக்காட்டாகக் காட்டிய அன்பு, இரக்கம், நீதி, சகோதரத்துவம், சமத்துவம், பொறுமை, நேர்மை மற்றும் பிறருக்காக வாழும் உயரிய பண்பு ஆகியவை காலத்தால் அழியாத மனிதநேய விழுமியங்களாகும்.

மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் இணைப்பதே நபிகளாரின் வாழ்வின் முக்கியப் பாடங்களில் ஒன்றாகும். குறிப்பாக, பல இனங்களும் மதங்களும் சமூகங்களும் இணைந்து வாழும் எமது வடக்கு மாகாணத்தில், இந்தப் பண்புகள் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

நாம் ஒவ்வொருவரும் எமது மத நம்பிக்கைகளை மதித்துக் கொண்டே, ஏனைய சமயங்களையும் அவர்களின் விழுமியங்களையும் மதித்து, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர நம்பிக்கை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

மீலாதுன் நபி விழா, நபிகளாரின் பிறப்பை நினைவுகூரும் ஒரு நிகழ்வாக மட்டும் அமையாமல், அவர்களின் போதனைகளை எமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைய வேண்டும். துயருற்றவர்களுக்கு துணையாக நிற்பதும், ஏழைகளுக்கு உதவுவதும், அயலானை மதிப்பதும், அநீதிக்கு எதிராக நிற்பதும், சமூகத்தில் அமைதியையும் கருணையையும் வளர்ப்பதும் நபிகளாரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய உயரிய பாடங்களாகும்.

இந்தப் புனித நாளில், எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களிடையேயும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலும் வலுப்பெற்று, அமைதியும் செழிப்பும் நிலவ வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் அருள்மிகு வாழ்வியல் நெறிகள் எமது சமூகத்தில் அன்பையும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேலும் வளர்க்கட்டும்.

மீண்டும் வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகள்.

ஈத் முபாரக்.