கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் 29.05.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர், மாவட்டத்துக்கு அதிகளவு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திணைக்களங்கள் ஒத்துழைக்கவேண்டும் எனக் கோரினார். அத்துடன் சுமார் 400 காணிப்பிணக்குகள் வரையில் ஆராயப்பட்டு அவற்றில் 90 சதவீதமானவை தீர்க்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். காணிப் பிணக்குகள் இல்லாத காணி உரிமைப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத 8,000 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் சட்டவிரோத மணல் அகழ்வு மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையாக தொடர்கின்றது என்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ அமைச்சருமான சந்திரசேகரன், அதிகாரிகள் தமது பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன் சில நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றபோதும் சில நிறுவனங்கள் தங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கிச் செயற்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.

நீவில் கமக்கார அமைப்புக்கு உட்பட்ட விவசாய வீதியின் புனரமைப்பில் மோசடி இடம்பெற்றதாக பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இது தொடர்பில் விசாரணைக் குழு அமைத்து உண்மையைக் கண்டறியுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்த நிலையில் ஒருங்கிணைப்புக்குழு அதனை ஏற்றுக்கொண்டது.

இதேநேரம், வனவளத் திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத உப்பளம் கிளிநொச்சியில் இயங்கி வரும் நிலையில் அதை அகற்றவேண்டும் என ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்போது ஆளுநர், குளக்கட்டை உயர்த்தி நன்னீரை சேகரிப்பதற்கு வனவளத் திணைக்களம் அனுமதி வழங்க மறுகின்றது. அவ்வாறு நீரை சேமிப்பதால் தமது மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகின்றது. ஆனால் உப்புநீரை மரங்கள் நிறைந்த வனவளத் திணைக்களத்தின் பிரதேசத்துக்கு கொண்டுவரும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு எவ்வாறு அனுமதி வழங்கியது எனக் கேள்வி எழுப்பினார். இதன்போது வனவளத் திணைக்களதால், மேற்படி உப்பளத்துக்கான அனுமதி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அது தொடர்பான ஆவணங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு வழங்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதேநேரம் உருத்திரபுரத்தில் வனவளத் திணைக்களத்தினருக்கு இலஞ்சம் கொடுத்தால் அவர்கள் எல்லைக் கல்லை நகர்த்தித்தருகின்றனர் என பொதுமக்களால் குற்றச்சாட்டு முனவைக்கப்பட்டது. இதையடுத்து வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய காணிப் பிரச்சினை தொடர்பில் தனியான கூட்டம் நடத்துவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இ.அருச்சுனா ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், அமைச்சுக்களின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.