ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி திரு கிளைமென்ற் நயல்சோசி வுயுலே அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 யூலை 2019 அன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐநா விசேட பிரதிநிதிக்கு இதன்போது விளக்கமளித்தார்.

காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்குவதற்கு வடமராட்சி களப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் செயற்பட்டு வருவது தொடர்பில் கௌரவ ஆளுநர் இதன்போது விரிவாக விளக்கமளித்தார்.

இதேவேளை இலங்கையில் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் தடைபட்டிருந்த பாதுகாப்பு படைகளின் வசமிருந்த் பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிப்பது தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனையும் இதன்போது கௌரவ ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.