‘பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது. எத்தனை மாணவர்களைத் தமது சமூகத்துக்குச் சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதற்கு வழங்கியுள்ளோம் என்பதில்தான் ஒரு பாடசாலைக்கு உண்மையான பெருமை கிடைக்கும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு ‘பவள விழா’ நிகழ்வுகள் நேற்றும் இன்றும் கோலாகலமாக நடைபெற்றன. இதன் இரண்டாம் நாளான இன்று (06.06.2026) சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற விசேட இரண்டாம் அமர்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
கல்லூரியின் அதிபர் க.ஜெயவீரசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், பாடசாலையின் வரலாற்றைக் கூறும் ‘வித்தியாதீபம்’ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. அத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் உள்ளிட்ட கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சாதித்த மாணவர்களுக்கு ஆளுநரால் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மேலும், பாடசாலையின் ‘வித்தியின் சிறப்புமிகு மைந்தன்’ விருது, மருத்துவர் கலாநிதி வீரகத்திபிள்ளை சண்முகராஜா மற்றும் கலாநிதி வி.நவநீதன் ஆகியோருக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உரையாற்றிய ஆளுநர் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
‘அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரது அர்ப்பணிப்பாலேயே இன்று இந்தப் பாடசாலை உயர்ந்து நின்று பவளவிழாக் காண்கின்றது. நான் எப்போதும் தலைமைத்துவத்தையே வலியுறுத்தி வருகின்றேன். எந்தவொரு பாடசாலையினதும் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில்தான் தங்கியிருக்கின்றது. சிறப்பான தலைமைத்துவம் அமைந்தால் அந்த நிறுவனம் எழுச்சியடையும்;. தவறான தலைமைத்துவம் கிடைத்துவிட்டால் அது வீழ்ச்சியடையும். தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் உயர்பதவிகளில் இருப்பதால் நாம் தினமும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றோம். தலைமைத்துவப் பண்புக்கு மேலதிகமாகச் சமூகப் பொறுப்பும் மனிதநேயமும் அவர்களிடம் இல்லாததால் பாதிக்கப்படுவது எமது மக்கள்தான்.
‘உயர் ஆளுமையும் நற்பண்புகளும் கொண்ட நாளைய தலைவர்களை உருவாக்குவதில் வடக்கு மாகாணத்தின் முன்னணிப் பாடசாலையாக இதனை உருவாக்குவோம்’ எனப் பாடசாலையின் அதிபர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அவரது தூரநோக்குக்கு எனது பாராட்டுக்கள். காலத்துக்குத் தேவையான விடயத்தை அவர் முன்வைத்திருக்கின்றார். படித்து உயர்நிலைக்கு வந்து பணத்தைச் சம்பாதித்தால் சரி என்றே பலர் நினைக்கின்றனர். இப்போதுள்ள புதிய தலைமுறையினருக்கும் அதுதான் இலக்காக இருக்கின்றது. அது முற்றிலும் தவறு. புதிய தலைமுறைக்குச் சேவை மனப்பாங்கு என்றால் என்னவென்றே தெரியாத காலமாக இது மாறி வருகின்றது. எனவே, பாடசாலைகள் இளவயதிலேயே பிள்ளைகளுக்குப் பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பழக்க வேண்டும்.
இன்று இந்தப் பாடசாலையால் கௌரவிக்கப்பட்ட மருத்துவர் சண்முகராஜா மற்றும் கலாநிதி நவநீதன் ஆகிய இருவரையும் எனக்கு நன்கு தெரியும். சேவைத்துறைகள் பணமீட்டும் துறைகளாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், அவர்கள் எவ்வாறு தமது உயிரைத் துச்சமாக மதித்துச் சேவை செய்தார்கள் என்பதை அதிபர் இங்கு நினைவுகூர்ந்தார். பாராட்டுக்களையும் கௌரவங்களையும் நாடாதவர்களைத் தேடித்தான் அவை செல்லும். அவர்களைப் போன்று இன்றுள்ள இந்தப் பிள்ளைகளும் நாளை உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்தக் கௌரவிப்பு வழங்கப்படுவதாக அதிபர் சொன்னார்;. அது முற்றிலும் உண்மையாகும். அப்படியான சேவையுள்ளம் கொண்டவர்களாகத்தான் நீங்கள் வளர வேண்டும். இந்தச் சமூகத்துக்காக அவர்கள் தினமும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்.
நாம் எவ்வளவுதான் படித்து உயர் நிலைக்கு வந்தாலும், சமூகத்துக்குச் சேவை செய்யாவிட்டால் நாளை எவரும் மதிக்க மாட்டார்கள். பணத்தை உழைப்பதால் மதிப்பு வராது. சேவையைச் செய்தால்தான் மதிப்பு வரும். நான் இந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில், இங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் என்னிடம், ‘இங்கு படிக்கும் இந்த மாவட்டத்துப் பிள்ளைகள் ஏன் மீண்டும் இந்த மாவட்டத்துக்குச் சேவை செய்ய வருகின்றார்கள் இல்லை?’ எனக் கேட்டார். எமது பிள்ளைகளிடத்தில் எமது மாவட்டம், எமது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்த வேண்டும். அதைப் பாடசாலைகளால்தான் செய்ய முடியும்.
இன்று பேருந்தில் பயணிக்கும்போது குடிநீர் குடித்துவிட்டுப் போத்தலை வீதியில் வீசுகின்றார்கள். வீதியில் செல்லும்போது குப்பைகளைப் போடுகின்றார்கள். அதைச் செய்யும் இன்றைய புதுத் தலைமுறையினருக்குத் தாம் செய்வது பிழையென்ற உணர்வோ அல்லது குற்ற உணர்வோ ஏற்படுவதில்லை. அந்தளவுக்கு அவர்கள் மாறிவிட்டார்கள். எனவே, அவர்களுக்குச் சரியானதைச் சொல்லிக் கொடுத்து மாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பாடசாலைகளுக்கும் எங்களுக்கும் உள்ளது. இதைச் செய்யத் தவறினால் சமூகத்தின்பால் சிந்திக்கும் ஒரு தலைமுறை எதிர்காலத்தில் இல்லாமல் போகும். எனவே, பாடசாலைகள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,’ எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





