உரிய வழித்தட அனுமதி இன்றி யாழ் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுண்ணாம்புக்கல் கொண்டு செல்ல முடியாது என மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் நேற்று  (30/05/2024) மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ் மாவட்டத்தில் அகழப்படும் சுண்ணாம்புக் கற்களை எவ்வித அனுமதியும் இன்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமைய, அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசார் அதிகாரிகள் பல்வேறு விடயங்களை முன்வைத்தனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி சில பகுதிகளில் சுண்ணாம்புக்கல் அகழப்படுவத்தோடு, வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. சட்ட விதிமுறைகளுக்கு அமைய சுண்ணாம்புக்கல் அகழ வேண்டும் எனவும், அதனை உள்ளூர் தேவைக்கே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது . அத்துடன் விவசாய நடவடிக்கைக்காக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும், அனுமதிப்பத்திர விதிமுறைகள் உரியவாறு பின்பற்றப்படுகின்றதா என தொடர் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளுக்கு  இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது .

அத்துடன், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு மண் கொண்டுவருவதை தடை செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.