ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 08.05.2025 அன்று வியாழக்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இதன்போது ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மற்றொரு தொகுதி சோலர் பனலுக்கான இணைப்பு இலங்கை மின்சார சபையால் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. கூரைமேல் சோலர் பனல் பொருத்தப்படவில்லை என்றும் நீரோட்டத்தின் மேலேயே சோலர் பனல் பொருத்தப்பட்டுள்ளமையாலேயே அந்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இலங்கை மின்சார சபையால் இதன்போது ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் கட்டடம் அமைப்பதற்கான கேள்விகோரல் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனை நிறைவு செய்வதற்கு காலம் தேவை என்பதால் அதுவரையான காலத்தில் சோலர் பனல் ஊடான மின்உற்பத்தியை கொள்வனவு செய்வதற்குரிய அனுமதியை மின்சார சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதன் பின்னர் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தோட்டங்களையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலர், திட்டமிடல் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.