விவசாயத் திணைக்களத்தினால் உள்ளீடுகள் வழங்கல்

விவசாயத் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முலம் உள்ளீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் (PSDG) கீழ் இஞ்சி செய்கையினை விரிவுபடுத்தும் நோக்குடன் கடந்த 04.04.2025 ஆம் திகதியன்று இஞ்சி விதை கிழங்கு விநியோகம் வவுனியா பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் தெரிவுசெய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு, பயனாளி ஒருவருக்கு 10 கிலோ வீதம் இலவசமாக விதை கிழங்குகள் வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் மிளகாய்ச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடனும் செத்தல் மிளகாய் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்குடனும் KOPIA திட்டத்தின் கீழ் மிளகாய்ச் செய்கையாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு முதற் கட்டமாக 80 பயனாளிகளுக்கு, பயனாளி ஒருவருக்கு 100 கிராம் எனும் அடிப்படையில் MICH HY 1 எனும் உயர்ரக கலப்பின விதைகள் 26.03.2025 ஆம் திகதியன்று புளியங்குளம், நயினாமடு, பிரமனாளன்குளம் மற்றும் சூடுவெந்தபுலவு விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

இவ் விநியோக நிகழ்வுகளில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி விவசாயப் போதனாசிரியர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் பயனாளிகளுக்கு பயிர்ச் செய்கை தொடர்பான பயிற்சிகளும் வழிகாட்டல்களும் அன்றைய தினம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.