யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளில் விவசாயச் செய்கையை விரைவுபடுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு என காணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்தக் காணிகளில் மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகளால் எமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாக அவர்களுக்கான மின்சார வசதி இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என மின்சார சபையின் கோருகின்றனர். பாதைகள் அமைப்பதற்கு சில இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு வேலிகள் இடையூறாக இருக்கின்றன. எனவே இந்த விடயங்களைக் களைந்து விவசாயிகள் முழுமையாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
வீதிகள் செப்பனிடுவதற்கு இடையூறாக உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவது தொடர்பில் இராணுவத்தினருடன் நேரடியாக நேரில் சென்று பார்வையிடுவதற்கும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு அமைவாக விரைவில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி, வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள், பிரதேச சபையின் வீதிகள் என்பனவற்றை உடனடியாக செப்பனிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளன என்றும் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் குறிப்பிட்டார்.
மேலும் மின்சார இணைப்புக்கான கோரிக்கை கடிதத்தை முன்வைக்குமாறு மின்சார சபையினர் கேட்டுக்கொண்டனர். அதேவேளை பயனாளிகளின் மின்சார இணைப்புக் கட்டணத்தை வழங்குவதற்கும் யாழ். மாவட்டச் செயலர் இணக்கம் தெரிவித்தார்.
இதேவேளை, பயனாளிகள் விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக காலையில் வந்து மாலையில் செல்ல வேண்டும் என்ற நிலைமை காணப்படுகின்றது எனவும், அவர்கள் அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இராணுவத்தினரிடம் முன்வைக்கப்பட்டது. அந்த மனிதாபிமானக் கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடி பதிலளிப்பதாக இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.
மேலும் விவசாயக் கிணறுகளையும் புனரமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார். தொடர் நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடனும் வலி. வடக்கு பிரதேச செயலர் தலைமையில் கலந்துரையாடுமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலர், வலி. வடக்கு பிரதேச செயலர், வலி. வடக்கு பிரதேச சபைச் செயலரின் பிரதிநிதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், இராணுவத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.