சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாண சபையின் நடமாடும் சேவையானது 28.09.2022 அன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நடமாடும் சேவையானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதல்களுடன், சம்பத்நுவர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்  தனித்துவமான 10 இடங்களில் இடம் பெற்றது.

இந்நடமாடும் சேவையில் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், பல்வேறுபட்ட விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் தேசிய அட்டை பெறுதல் மற்றும் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் பெறுதல் செயற்பாடுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் 136 அலுவலர்கள் கலந்துகொண்டதுடன் இந்நடமாடும் சேவையில் 582 பொதுமக்கள் சேவையை பெற்றுக் கொண்டனர்.

நடமாடும் சேவையில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்ட மற்றும் சம்பத்நுவர பிரதேச உத்தியோகத்தர்கள்.

நடமாடும் சேவையில் பங்குபற்றிய பிரதம செயலக கொத்தணி உத்தியோகத்தர்கள்.

நடமாடும் சேவையில் பணியாற்றிய விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள்

இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலர் ஆலோசனைச் சேவைகள், பயிர்ச்சிகிச்சை முகாம், மண்பரிசோதனை மற்றும் மரக்கன்றுகள் விற்பனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

 

நடமாடும் சேவையில் பங்கு பற்றிய கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள்

நடமாடும் சேவையில் பணியாற்றிய சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள்

இந்நடமாடும் சேவையில் பணியாற்றியசுகாதாரஅமைச்சின் ஊழியர்கள் அடிப்படை சுகாதாரம் மற்றும் மருத்துவசேவைகளில் ஈடுபட்டனர்.

நடமாடும் சேவையில் பங்கு பற்றிய மகளிர் விவகார அமைச்சின் தொழிற்துறைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்

நடமாடும் சேவையில் பணியாற்றிய ஆட்பதிவுத்திணைக்கள உத்தியோகத்தர்கள்

விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சித் திட்டம்
1. மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் (Tree Planting Program)

விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது நிகழ்வாக மரநடுகை நிகழ்வு இடம் பெற்றது. தேசிய பாடசாலையான மு/சம்பத்நுவர மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு மரநடுகையை ஆரம்பித்து வைத்ததுடன் தொடர்ந்து ஏனைய அதிதிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 50 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

2. முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
(Awareness Program for the Pre school Teachers)
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சம்பத்நுவர மகாவலி மைதானத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் 18 முன்பள்ளிகளுக்கான 38 ஆசிரியர்களும், 127 பெற்றோர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் வளவாளர்களாக வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு சுகாதார பிரதிப் பணிப்பாளர், முல்லைத்தீவு பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண பிரதமசெயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘சிறுபிள்ளைகளின் உடல் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு போசாக்கு என்பது மிகவும் உறுதுணையாக அமைவதுடன் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைகின்றது’ எனவும் தனது கருத்தில் தெரிவித்தார். மேலும் முன்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பிரதம செயலாளரிடம் தெரியப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வானது வளவாளர்களின் பங்குபற்றுதலுடன் மு.ப 10.30 முதல் பி.ப 12.30 வரை இடம்பெற்றது.

3. தரம்-9 மற்றும் உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி (Awareness Program for the Grade 09-A/L school students (Girls)

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மு/சம்பத்நுவர மகாவித்தியாலய பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில், 35 பாடசாலைகளைக் கொண்ட 227 மாணவர்கள் பங்குபற்றினார்கள். இந்நிகழ்வின் வளவாளராக வ/தர்மபாலவித்தியாலய ஆசிரிய ஒருவர் கலந்துகொண்டு போதைப்பொருள், இளவயதுகர்ப்பம், சுகாதாரம், வன்முறையில்லாதசூழல் போன்ற விழிப்புணர்வுக் கருத்துக்களை முன்வைத்தார்.

4. சம்பத்நுவர பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி (Awareness Program for farmers in the area)
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சம்பத்நுவர பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இங்கு மாகாணப் பிரதிப் பணிப்பாளர், பண்ணை முகாமையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள் என 25 உத்தியோகத்தர்களும், 54 விவசாயிகளும் பங்குபற்றினார்கள்.  இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் இணைந்து நடமாடும் விற்பனை, பழமரநடுகை, மரக்கறிவிதைகள், உரம் மற்றும் மஞ்சள் பொதியிடல் போன்ற செயற்பாடுகளுக்கான விளக்கங்கள்  அளிக்கப்பட்டதுடன் பயிர்களுக்கான நோய் மற்றும் தீர்வுகளும் ஆராயப்பட்டன.  அத்துடன் வீட்டுத் தோட்டம் மேற்கொள்ளல், நெற்பயிர்ச் செய்கை பற்றிய விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

5. மூத்த குடிமக்களுக்கான மன அழுத்தமில்லாத முகாமைத்துவ திட்டம் (Stress free management program for senior citizen)
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சம்பத்நுவர பிரதேசசெயலக ஆரம்ப சுகாதாரபிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு முதியோரின் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு அவர்களின் பல்வேறுவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிகழ்வில் 29 முதியோர்கள் கலந்து கொண்டார்கள்.

6. சுயதொழில் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் (Awareness on Self-employment and opportunities on SME)
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது சம்பத்நுவர பிரதேச செயலக ஆரம்ப சுகாதார பிரிவில் இடம்பெற்றது. இங்கு தொழில் தேடுபவர்கள், தொழில் செய்கின்றவர்கள், கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 27 பயனாளிகள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வில் விழிப்புணர்வு ஆலோசகராக கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் என்பவர்கள் கலந்துகொண்டு தொழில் முயற்சிகளை மேம்படுத்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், உள்ளூர் உற்பத்திகளை உருவாக்கல், சந்தைப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

7. உள்ளூர் அலுவலக அதிகாரிகள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (Discussion with PS Members and related officers of LA)
இவ் விழிப்புணர்வு கருத்தமர்வானது சம்பத்நுவர பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. இக்கருத்தமர்வு நிகழ்வில் பிரதம செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், முல்லைத்தீவு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் என்போர் கலந்துகொண்டு போக்குவரத்து, குடிநீர், கால்நடை வைத்தியம் தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டன. அத்துடன் இக்கருத்தமர்வில் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட சம்பத்நுவர பிரதேச செயலக பிரிவிற்கான வடக்கு மாகாணசபையின் நடமாடும் சேவையானது மாலை 4.00 மணியுடன் நிறைவுபெற்றது.