கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல்

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல்கட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 22.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இன்றைய இளையோர் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றது. இளையோருக்கு பொழுதுபோக்குவதற்கான நேரமும் குறைவாகவுள்ளதுடன் அவர்களுக்கு பொழுதுபோக்குக்கான இடவசதிகளும் இல்லை. பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னர் தனியார் கல்வி நிறுவனங்கள் என்று ஓடிக்கொண்டேயிருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்திலும் கைத்தொலைபேசியில் மூழ்க்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு சிந்தனை மாற்றம் அவசியம். இதே நிலைமையைத் தொடர்வதற்கு அனுமதிப்பது ஆபத்தானது. கலைகள், விளையாட்டுக்கள் ஊடாகவே இந்த நிலைமையை மாற்ற முடியும் என என்னைச் சந்தித்த பலர் குறிப்பிட்டனர். இதில் தன்னார்வமாகச் செயற்படவும் ஆர்வமாக உள்ள அவர்களையும் பாராட்டுகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் மூத்த கலைஞர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொண்டவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களிடமிருந்து இந்தச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது பொருத்தமானது எனக் குறிப்பிட்டதுடன் அதன் ஊடாக அந்தச் சமூகங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருத்துகளை முன்வைத்தனர். மேலும் கடந்த காலங்களில் தம்மால் அவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சிகள் அதில் அடையப்பட்ட வெற்றிகள் தொடர்பிலும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதனை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாகச் செய்வதன் ஊடாகவே சாத்தியம் எனவும் குறிப்பிட்டனர். இவற்றை முன்னெடுப்பதற்கான துறைசார் அரச அதிகாரிகள் உள்ளபோதும் இந்த விடயங்களை அவர்கள் அர்ப்பணிப்புடன் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர். அதேநேரம், இதனை முன்னெடுப்பதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பிலும் இன்றைய மாணவ சமுதாயத்தின் எண்ணவோட்டங்களின் சிதறல்கள் தொடர்பிலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்டமருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளில் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ள மட்டுப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து அந்தப் பரீட்சார்த்த முயற்சியின் அடிப்படையில் ஏனைய பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார். முன்னோடித் திட்டத்துக்கான பாடசாலைகளை சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் கல்வி அமைச்சின் செயலர் ஆகியோர் அடையாளப்படுத்துவது என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.