இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 30.04.2025 அன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார்.
கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது அஞ்சலி உரையில், இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானவை. கடந்த காலங்களில் நாங்களும் இதனை அனுபவித்திருக்கின்றோம். கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையவேண்டுவதோடு, இத்தகைய தாக்குதல்களை கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர்.