ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க வேண்டும் – ஆளுநர்

ஜனநாயகத்தையும் பேண்தகு இலங்கையினையும் கட்டியெழுப்புவதற்கு இலஞ்ச ஊழலை முதலில் இல்லாதொழிக்க வேண்டுமென்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் இது தொடர்பில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலஞ்ச ஊழலினை வடமாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் எண்ணக்கருவிற்கு அமைய இலஞ்ச ஊழல் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பவை தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் செயலமர்வு 13 செப்ரெம்பர் 2019 அன்று முற்பகல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சரத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் டிஜிற்றல் தொடர்பாடலின் மூலம் ஆளுநர் உரையாற்றினார்.

இலஞ்ச ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் தமது செல்வாக்கால் தப்பிப்பதுடன் சாதாரண கடை நிலை ஊழியர்கள் தண்டிக்கப்படும் நிலைமையே பெரும்பான்மையாக நம்நாட்டில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள், இலஞ்சம் மற்றும் ஊழல்களில் ஈடுபடும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அப்போதுதான் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்றும் மேலும் தெரிவித்தார்.

இன்றைய இந்த செயலமர்வில் அரசாங்க அதிகாரிகள்இ சமூக மட்டத்தில் செயற்படும் பொதுமக்கள் மற்றும் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பங்குற்றியதுடன் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சரத்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு