மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதிப்பங்களிப்பின் கீழ் வயல் நிலங்களில் அவரையினப் பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோம்பாவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பயிர்மாற்றீட்டுச் செய்கையின் உழுந்து அறுவடை வயல் விழா நிகழ்வானது கரியல் வயல் என்னும் இடத்தில் 27.05.2025ம் திகதி காலை 9.00 மணியளவில் தொழில்நுட்ப உதவியாளர் செல்வி கெ. மதுர்சிகா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. மேரி ஆன்சலா லக்~ன், புதுக்குடியிருப்பு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மறுவயற் பயிர் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி சிவகௌரி குணசீலன் ஏனைய பாடவிதான உத்தியோகத்தர் விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஓரு கண்டமாக (100 ஏக்கர்) பயிர் மாற்றுச்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பாராட்டுத் தெரிவித்ததோடு எதிர்வரும் காலங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக அளவில் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன் இனிவருங்காலங்களிலும் இப்பிரதேச விவசாய அபிவிருத்திக்காக விவசாயத்திணைக்களத்தின் உதவித்திட்டங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து கருத்துரை வழங்கிய மறுபயிர் பாடவிதான உத்தியோகத்தர் தனது உரையில் வயல் நிலங்களில் தானிய செய்கையினை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் கீழ் கரியல் வெளி விவசாயிகளுக்கு 99 ஏக்கருக்கு உழுந்து விதைகள் வழங்கப்பட்டது. இச் செயற்திட்டத்தின் நோக்கமாக நெல் செய்கையுடன் ஒப்பிடும் போது குறைந்த நீர் தேவையுடன் அதிக விஸ்தீரணத்தில் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ள முடியும் அத்துடன் வயல் நிலங்களில் அவரையினச் செய்கையினை மேற்கொள்ளும் போது மண் வளம் அதிகரிக்கும் எனினும் கரியல் வெளி வயல் நிலத்தில் சில இடங்களில் மண்ணின் உவர்த்தன்மையினை அறியக்கூடியதாகவுள்ளது இதனைக் குறைப்பதற்கு விவசாயிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என குறிப்பிட்டதுடன் கருக்கிய உமியினை ஏக்கருக்கு200kg என்ற அளவில் இடுவதன் மூலமும் சீரான வடிகால்களை அமைப்பதன் மூலமும் உவர் தன்மையினைக் குறைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கையில் தொடர்ச்சியாக இப் பகுதியில் பயிர் மாற்றீட்டுச் செய்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதனை வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீட்டில் வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்ததுடன் எதிர்வரும் காலங்களில் இவ்விடத்திற்கான நீர்ப்பாசன வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆவன செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து களத்தினை பார்வையிட்டு அறுவடையினை மேற்கொண்டதுடன் வயல்விழா நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.