கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிருஸ்ணபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி,பீடைகளைக்கட்டுப்படுத்தல் தொடர்பான வயல் விழா நிகழ்வானது 11.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் க.செல்வரத்தினம் என்பவரின் களத்தில் தொழில்நுட்ப உதவியாளர் திருமதி.P.ஷிவனியா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ் வயல் விழா நிகழ்வில் மிளகாய்ப்பயிருக்கு 3G கரைசலை பயன்படுத்தி பூச்சி, பீடைகளைக்கட்டுப்படுத்திய களத்தை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.S.விஜயதாசன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இவ்வாறான சேதன கரைசல்களை ஏனைய விவசாயிகளும் பயன்படுத்தி விவசாய உற்பத்தி செலவினை குறைத்து உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தங்களது வாழ்வாதாரத்தினை உயர்திக்கொள்வதுடன் இரசாயன மருந்து பாவனையையும் குறைத்து சூழல் நேயத்துடன் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மறுவயற் பயிர் பாடவிதான உத்தியோகத்தர் திரு.க.பிரதீபன் அவர்கள் ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவம், 3G கரைசல் தொடர்பான செய்முறை ரீதியான விளக்கங்களை வழங்கி சிறப்பித்ததுடன் பயிர்ப் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் திருமதி.சி.ரூபிகாசன் அவர்கள் பயிர்ச்சிகிச்சை மற்றும் நோய், பீடைகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கினார். மேலும் ஏனைய பாடவிதான உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு தலைவர் மற்றும் விவசாயிகளினது கருத்துரைகளுடன் குறித்த நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.