இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (OnlineBusiness Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ ஆளுநர்தெரிவிப்பு

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்  தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் தலைமையில் , ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (30/07/2024) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், ஆளுநரின் உதவிச் செயலாளர், சமுர்த்தி ஆணையாளர் நாயகம் மற்றும் யாழ் மாவட்டத்தில் சேவையாற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கான வியாபார பதிவுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால தாமதமின்றி வியாபார பதிவுகளை முன்னெடுப்பதற்கு இணையதள பதிவு முறையை (Online Business Registration)   அறிமுகப்படுத்துவது சிறந்த செயற்பாடு என தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வடக்கு மாகாணத்தில் அதற்கான செயற்பாட்டை துரிதகதியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினார். அத்துடன் பொதுச்சேவைக்கான செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதும் அவசியம் என தெரிவித்தார்,

விசேட தேவையுடையோர் பொதுச் சேவைகளை இலகுவில் அணுகக்கூடிய வகையில் கட்டட நிர்மாணங்கள் அமைக்கப்படுதல் வேண்டும் எனவும், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் அவர்கள், போக்குவரத்திற்கான பஸ்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக கூறினார். அத்துடன் விசேட தேவையுடையோர் இலகுவாக அணுகக்கூடிய வகையில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்ளாத பொது நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூரினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் அசுவெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் காணப்படும் இடையூறுகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு இதன்போது கொண்டு செல்லப்பட்டது. அதில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவும் நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் அவர்கள் தெரிவித்தார்.