வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் 08/07/2024 அன்று  ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு  மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் அவர்கள் கூறினார். மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி வருகைதரும் வகையில் வகுப்பறைகள் மாற்றப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கு இன்று நியமனம் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஆசிரியர்கள் , தங்களுக்கு நியமனம் வழங்கப்படும் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர்.