உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கும் போது பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  உள்ளூராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  “பேடகம்” மலர் வெளியீட்டு விழாவின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கௌரவ ஆளுநரால்  நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் விசேட உரையும் நிகழ்த்தப்பட்டது.

இளம் தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கம்  இல்லாமை  கவலையளிப்பதாக கெளரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்தல், கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கடப்பாடுகள் பிரதேச சபை மற்றும் நகரசபைகளிடம் காணப்படுகின்றது. பிரதேச சபைகள் தங்களைத்தாமே நிர்வகிக்ககூடிய பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐனாதிபதியால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.  அதற்கமைய எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் பிரதேச சபைகள் சுயேட்சையாக இயங்கி தங்களுக்கான வருமானங்களை ஈட்டி கொள்ளுதல் அவசியமாகும்.  ஐனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய சனசமூக நிலையங்களூடாக கள விஐயம் மேற்கொண்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து ஆராய்வதுடன் கிராம மட்டங்களில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்திகளின் விற்பனைகளை மறந்து சர்வதேச நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விற்பனை முகவர்களாக கிராம மக்கள் மாறிவருகின்றமை கவலையளிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். இந்த நிலை மாற்றப்படும் போது பிரதேச அபிவிருத்தி ஏற்படும். இதேவேளை அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர்  தமது கடமை நேரத்தில்  கைபேசியுடன் பொழுதை கழிப்பதை தாம் நேரடியாக கண்டதாகவும் ஆளுநர் தெரிவித்தார். மக்களின் வரிப்பணத்தில்  சம்பளத்தை பெறும் அரச உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தில் பொதுமக்களின்  தேவைகளினை பூர்த்தி செய்ய வேண்டியது முக்கியமான கடமை என  கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டினார்.