நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையம் தொடர்பில் தேவையற்ற வதந்திகள் பரப்படுகின்றன. இந்த மருத்துவமனையை முழு வீச்சில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையத்தின் பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி ஆளுநர் அவர்களால் இன்று புதன்கிழமை காலை (24.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில், இந்த மருத்துவமனையை முழுமையாக இயக்குவதுதான் எங்கள் நோக்கம். அதற்குரிய ஆளணிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதேநேரம் இந்த மருத்துவமனையை தற்போது இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்த கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதனை தொடர்ந்;து இயக்குவதற்கான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் தனது உரையில், இந்த நிகழ்வு மகிழ்ச்சியான தருணம். இந்த மருத்துவமனைக்கான ஆளணியை அங்கீகரிக்குமாறு முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திடம் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றோம். அவர்களை இங்கு வந்து நேரடியாகப் பார்வையிடுமாறும் கேட்டுள்ளோம். விரைவில் சாதகமான நடவடிக்கைகள் இடம்பெறும் என நம்புகின்றேன் எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை அத்தியட்சகர் பிரபாத், மருத்துவர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், நோயாளர் நலன்புரி சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையத்திலுள்ள செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.