வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.06.2026) திங்கட்கிழமை காலை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக, போரால் இடம்பெயர்ந்த மக்களின் துரித மீள்குடியமர்வு நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்நிறுவனங்களின் அர்ப்பணிப்பான பணிகள் மிகப்பெரிய உதவியாக அமைந்திருந்ததை அவர் இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டார்.
அத்துடன், மக் நிறுவனத்தின் சார்பில் அதன் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் அண்டி கிரம்ப், வாழ்வாதார நிபுணர் ஹரிஷh, திறன் அபிவிருத்தி நிபுணர் செந்தூரன் ஆகியோரும், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஹன்னா பிக்டன், செயற்பாட்டு முகாமையாளர் விதுசன் அந்தோனி, சமூகத் தொடர்பு முகாமையாளர் ஏ.அருள்குணசீலன் ஆகியோரும் பங்கேற்றனர்.



