வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ க.இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், ஆளுநரின் செயலாளர், கல்வி மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், நிதி மற்றும் திட்டமிடல் ஆகிய பிரிவுகளுக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும், ‘பெண்மையை நேசிப்போம்’ என்னும் தொனிப்பொருளிலான விசேட கலைநிகழ்வும் அரங்கேறின. பின்னர் இடம்பெற்ற சிறப்புரைகளின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமதி சிவானி சண்முகதாஸ் அவர்கள், ‘பொருளாதார விடுதலையே பெண்களின் அதிகாரம்: நெருக்கடியான சூழலில் உரிமை, சமத்துவம், நீதியை வலுவூட்டுதல்’ என்னும் பொருளில் விசேட உரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், நாட்டுக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவர்களாகப் பெண்களே திகழ்கின்றனர் எனச் சுட்டிக்காட்டினார். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், ஆடைத்தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று உழைப்பவர்கள் எனப் பல வழிகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது என்றார். மேலும், தற்காலத்தில் சமூக ஊடகங்கள் வருமான நோக்கத்துக்காகப் பிழையான கருத்துக்களைப் பரப்பி வருவதால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் இ.சந்திரசேகர், இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முதலாவது தமிழ்ப் பெண் அமைச்சர் என்ற பெருமையை இன்றைய பிரதம அதிதியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பெற்றுள்ளமையைப் பாராட்டினார். ‘நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என்ற உறுதியுடனேயே நாம் பொறுப்பேற்றோம்; அதற்கான மாற்றங்களைச் செய்தும் வருகின்றோம். சமீபத்தில் அரச நிறுவனத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவொன்று வெளியாகியிருந்தது. பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளை நாம் நிச்சயம் கிழித்தெறிவோம். பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. தற்காலத்தில் பெற்றோர்கள் சமூக அக்கறையின்றி, தமது பிள்ளைகளை வெளி உலகம் தெரியாத வகையில் வளர்க்கின்றனர். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம் விளைகின்றோம்,’ என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், யாழ்ப்பாண மண்ணின் பெருமையானது இம்மண்ணின் பெண்களின் அளப்பரிய துணிவிலேயே தங்கியுள்ளது எனப் புகழாரம் சூட்டினார். ‘பெண் தொழில்முனைவோர்கள் பொருளாதார ரீதியாக வலுவூட்டப்படும்போதே அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலாரும் ஒரே வேலையைச் செய்தாலும், இருவருக்கும் சமமான ஊதியம் கிடைக்கின்றதா என்றால், இன்றும் இல்லை என்றே கூறவேண்டும். அரச நிறுவனங்களில் கூடப் பணிபுரியும் பெண்களின் குடும்பச் சூழல் குறித்துச் சிந்திக்கப்படுவதில்லை. எனவே, வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காகத் திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் முதியோர் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். மேலும், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேகப் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும்,’ என அவர் வலியுறுத்தினார்.
அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துச் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களைப் பாராட்டி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கும் நிகழ்வும் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று விழா நிறைவுற்றது.







