வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர்

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களிடம் திறமை, உழைப்பு, புத்தாக்க சிந்தனை மற்றும் தரமான உற்பத்திகளை உருவாக்கும் ஆற்றல் என்பன ஏற்கனவே காணப்படுவதாகக் குறிப்பிட்டார். எனினும், அவர்களுக்கு முன்னிலையிலுள்ள மிகப் பெரிய சவால் சந்தைப்படுத்தலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போருக்குப் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் முயற்சிகள் இன்று ஆயிரக்கணக்கான தொழில் முயற்சிகளாகவும் அதற்கு அப்பாற்பட்ட அளவிலும் வளர்ந்திருப்பது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இந்த வளர்ச்சி வெறுமனே எண்ணிக்கையின் அதிகரிப்பாக இருக்கக் கூடாது என்றும், சிறிய தொழில் முயற்சியாளர்கள் நடுத்தர நிலையையும், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பெரிய சந்தைகளில் போட்டியிடக்கூடிய நிலையையும் அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே சில தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், தரமான உற்பத்தி, தனித்துவமான பொதியிடல் மற்றும் சந்தைத் தேவையைப் புரிந்துகொண்ட செயற்பாடுகள் அவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளைத் திறந்துள்ளன என்றார். ஒருவரால் தனியாக ஏற்றுமதிச் சந்தையை அடைய முடியாத நிலையிலும், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம் போன்ற அமைப்புகளின் ஊடாக கூட்டாகச் சந்தைகளை அணுகுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்திலிருந்து உருவாகும் உற்பத்திகள் கொழும்பு துறைமுகத்தை மாத்திரம் நோக்கிச் செல்லாமல், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்தே உலகச் சந்தையை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஆளுநர், முதலீட்டுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தேவையான நிதி அணுகல், காணி மற்றும் நிர்வாகத் தடைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

வன்னிப் பிரதேச தொழில் முயற்சியாளர்களை குறிப்பாகக் குறிப்பிட்ட ஆளுநர், கிடைக்கவுள்ள வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர்களாக அல்லாமல், அவற்றைப் பயன்படுத்தத் தயாராக இருப்பவர்களாக மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அச்சுவேலியில் ஏற்கனவே காணப்படும் கைத்தொழில் பேட்டையின் புனரமைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது சுமார் 4.5 சதவீதமாக காணப்படுவதாகவும், அதனை எதிர்காலத்தில் 10 சதவீதமாக உயர்த்தும் இலக்குடன் மாகாணம் முன்னேறி வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இந்த இலக்கை அரசாங்கம் அல்லது அரச அதிகாரிகள் மாத்திரம் அடைய முடியாது என்றும், புலம்பெயர் முதலீட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தனியார் துறை உள்ளிட்ட அனைவரினதும் கூட்டு பங்களிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘வடக்கில் தயாரிப்போம் – உலகத்திற்கு வழங்குவோம்’ என்ற புதிய நம்பிக்கையுடன் தொழில் முயற்சியாளர்களின் கனவுகள் வளரவும், உற்பத்திகள் உலகச் சந்தைகளை அடையவும், வடக்கு மாகாணம் பொருளாதார ரீதியாக மேலும் வலுவான மாகாணமாக உயரவும் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, தொழில் முயற்சியாளர்கள், அரச மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.