வடமாகாண மக்களின் வாழ்க்கை பற்றி அறிய அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

தற்போதைய வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை தாம் வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி. ஜூலி ஜே சங் கூறினார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் 23 ஆகஸ்ட் 2023 அன்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமெரிக்கத் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த ஆளுநர், மீள் குடியேற்றம் விவசாயம் மீன்பிடி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட மக்களின் பொதுவான உட்கட்டமைப்புகள் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்துவதாக கூறினார். மேலும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த சில வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்த தகவல்களையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது, இலங்கையின் அன்றாட செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புக்களில் தாம் திருப்தியடைவதாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண மக்களுக்காக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் இரண்டாவது தடவையாக வடக்குமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறித்தும் அவருக்கு நல்வாழ்த்துக்களையும் அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார்.