வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் மிக மோசமான அழிவுகளையும், அதிகளவான உட்கட்டுமானச் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளன. அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, மாகாண நிர்வாகத்தின் ஊடான புனரமைப்பு வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று புதன்கிழமை (03.12.2025) மேற்கொண்டார்.
வவுனியா பயணத்தின்போது ஆளுநருடன் கௌரவ பிரதியமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டச் செயலர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலர் நா.கமலதாசன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ் ஆகியோரும் இணைந்து பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டனர்.
பூவரசங்குளம் நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலய நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களைக் குழுவினர் சந்தித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், அதிகாரிகள் வழங்கிய முன்னெச்சரிக்கைக்கு அமைவாக நாம் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்தாலும், எமது வாழ்வாதாரமான கால்நடைகளைக் கொண்டுசெல்ல முடியவில்லை. கடந்த காலங்களை விட இம்முறை திடீரென வெள்ள மட்டம் அதிகரித்தமையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம் எனத் தெரிவித்தனர். இறந்துபோன கால்நடைகளைப் புதைப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
செட்டிக்குளம், கல்கன்குளம் சிறீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தங்கியுள்ள சண்முகபுரத்தைச் சேர்ந்த 39 குடும்பங்களைச் சந்தித்தபோது, அவர்கள் பாவற்குளம் வான் கதவு திறக்கப்பட்ட விவரம் தமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். ஆண்டுதோறும் தாம் பாதிக்கப்படுவதாகவும், இம்முறை தமது வீடுகள், ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் கால்நடைகளை இழந்து பூச்சிய நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்ட மக்கள், தம்மை வேறிடத்தில் குடியமர்த்துமாறும், அதுவரை நலன்புரி நிலையத்திலேயே தங்கப்போவதாகவும் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த மாவட்டச் செயலர், அம்மக்களுக்குத் தற்காலிக இருப்பிடத்தை வழங்குவதற்கும், நிரந்தரமாக வேறொரு இடத்தில் குடியமர்த்துவதற்குமான ஒழுங்குகளைத் துரிதமாக மேற்கொள்வதாகவும் ஆளுநர், பிரதியமைச்சர் முன்னிலையில் உறுதியளித்தார்.
வெள்ளத்தால் புரட்டிப்போடப்பட்ட பூவரசங்குளம் – செட்டிக்குளம் வீதியைப் பார்வையிட்ட ஆளுநர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இதனை உடனடியாக மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்கப் பணித்தார்.
குளக்கட்டு உடைந்ததால் ஆண்டியாபுளியங்குளம் – புதுக்குளம் வீதி துண்டாடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன் நீர் வெளியேறுவதைத் தடுத்து, வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நகரப் பகுதிகளைச் சுத்தப்படுத்துதல் மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே, மருதமடு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொதிகளையும் ஆளுநர் மற்றும் பிரதியமைச்சர் வழங்கி வைத்தனர்.
வவுனியாவைத் தொடர்ந்து கிளிநொச்சிக்கு பயணம் செய்த ஆளுநர், மாவட்டச் செயலருடன் இணைந்து பன்னங்கண்டிப் பகுதியைப் பார்வையிட்டார். வட்டக்கச்சிக்குச் செல்லும் பிரதான வீதி துண்டாகப் பிளவடைந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்காலிகப் புனரமைப்புப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்தார்.








