யாழ்ப்பாண மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகளில் காணப்பட்ட நடைமுறைச் சவால்களை விரைந்து தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுக்குமாறு வழங்கப்பட்ட பணிப்புரையின் தொடர்ச்சியாகவே இந்நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அரலி பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கி ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.