யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 29 செப்டெம்பர் 2025 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன்; அவர்களின் தலைமையிலும் மீன்பிடி நீரியல் வளங்கள் மற்றும் சமுத்திர வளங்கலுக்கான அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகிய கௌரவ க.இளங்குமரன் அவர்களது பங்குபற்றலுடனும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மின்மோட்டர், உறைப்பான்(Freezer), கால்நடை வளர்ப்பிற்கான உதவித்தொகைகள் என தெரிவு செய்யப்பட்ட மகளிர் தொழில் முனைவோருக்கு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா, வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் தனுஜா லுக்சாந்தன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் அகல்யா செகராஜா, வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்(பதில்) க.துசியா, கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர் பா.அபிராமி அவர்களுடன் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட தொழிற்துறை உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் மற்றும் அமைச்சின் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.