பிறக்கவுள்ள புதிய ஆண்டை பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்து செல்லும் இந்த ஆண்டு அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாக இருந்தபோதிலும், ‘டித்வா’ புயல் ஏற்படுத்திய எதிர்பாராப் பேரிடரால் எமது அபிவிருத்திப் பணிகள் பெரும் சவாலை சந்தித்தன. இருப்பினும், இப்பாதிப்புகளை ஈடுசெய்து, பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26.12.2025) மாலை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் துறை அமைச்சருமான கௌரவ இ.சந்திரசேகர் அவர்கள் தலைமை தாங்கினார். யாழ். மாவட்டத்துக்கான 2025ஆம் ஆண்டின் இறுதி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமாக இது அமைந்திருந்தது.

இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இன்றைய கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.