பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இயந்திரமயமான வாழ்வில் சிக்கி ஓடிக்கொண்டு மன அழுத்தங்களையும் மனச்சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் இவ்வாறான இசை நாடக கூத்துக்கள் மிகப் பெரிய வலிநீக்கியாக – புத்துணர்வு ஊட்டுவதாக இருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.05.2026) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

‘எமது தமிழ் மக்களின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலையைத் தனித்துவமாக மீளுருவாக்கம் செய்து அரங்கேற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் இந்தச் சிறப்பான முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வழமையான நிர்வாக மற்றும் கலாசார நிகழ்வுகளின் எல்லைகளைத் தாண்டி, அவர் முன்னெடுத்துள்ள இந்தப் புதிய முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனைய பிரதேச செயலாளர்களும் இதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், களியாட்ட நிகழ்வுகளை நோக்கியே இளைய சமூகம் அதிகம் திரள்கின்றது. ஆனால் எமது பாரம்பரியக் கூத்துக்களையோ அல்லது இவ்வாறான கலை நிகழ்வுகளையோ பார்ப்பதற்கு இளையோரைக் காண முடிவதில்லை. ஆனாலும், இந்தப் பிரதேசங்களில் கூத்துக்கலைகள் இன்னமும் அழியாமல் பாதுகாக்கப்படுவதும், மூத்த அண்ணாவிமார் இளையோரையும் இக்கலைகளுக்குள் உள்ளீர்த்து வருவதும் மிகவும் சிறப்பானதொரு விடயமாகும். இங்குள்ள பல ஆலயங்களில் இவ்வாறான கூத்து நிகழ்வுகள் நடைபெறுவது தொடர வேண்டும். அது ஏனைய இடங்களுக்கும் பரவுவது சமூகத்துக்கு ஆரோக்கியமாக அமையும்.

இந்த இசை நாடக கூத்துப் பெருவிழா சில காரணங்களால் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இன்று மிகச் சிறப்பாக அரங்கேறியிருக்கின்றது.

எமது இளைய சமூகத்தின் மத்தியில் அதிகரித்து வரும் சமூகப் பிறழ்வுகள் தொடர்பில் நாம் எல்லோரும் கவலை கொள்கின்றோம்; அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இளைய சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய வயதிலிருக்கும் பெரியவர்கள்கூட, இன்று வீடுகளுக்குள் சின்னத்திரைத் தொடர்களுடன் முடங்கிக் கிடக்கின்றார்கள். தொலைக்காட்சியில் திரைப்படங்களைப் பார்ப்பதுடனேயே தங்களது பொழுதுபோக்கை முடித்துக்கொள்கின்றார்கள். அவர்கள் இவ்வாறான கலாசார நிகழ்வுகளுக்கு வர வேண்டும். அவ்வாறு வரும்போது, தங்களது பிள்ளைகளையும் அழைத்து வர வேண்டும். அப்போதுதான் இந்தக் கலைகளின் அருமையை எங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்வார்கள். அவர்களைச் சமூகப் பிறழ்வுகளிலிருந்தும் மீட்டெடுக்க முடியும்.

இன்றைய தினம் கௌரவிக்கப்பட்ட மூத்த கலைஞர்களை நான் மனதாரப் பாராட்டுவதுடன், அவர்கள் தமது அனுபவத்தினூடாக இளைய கலைஞர்களையும் சிறப்பாக வளர்த்துவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன், என்றார்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பாரம்பரிய கலைத்துறையில் பங்காற்றிச் சாதனை படைத்த மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது ‘கலாபூஷணம்’ கந்தையா ஆறுமுகம், ‘கலாபூஷணம்’ செல்லையா தனபாலசிங்கம், ‘கலாபூஷணம்’ செல்லையா சுந்தரம்பிள்ளை, ‘கலாபூஷணம்’ இராசையா பரராஜசிங்கம் மற்றும் ‘கலைக்கிளி’ மிக்கேல் அலேஸ் ஆகியோருக்கு ‘பாரம்பரிய கலா வித்தகர்’ என்ற உயரிய கௌரவம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரம்பரிய மற்றும் இதிகாச விழுமியங்களைப் பறைசாற்றும் புகழ்மிக்க ‘சத்தியவான் சாவித்திரி’, ‘ஞானசௌந்தரி’, ‘அரிச்சந்திர மயானகாண்டம்’ மற்றும் ‘காத்தவராயன் கூத்து’ ஆகிய இசை நாடகக் கூத்துக்கள் கலைஞர்களால் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.சுரேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கௌரவ நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க.இளங்குமரன் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ளாத நிலையில், அவருக்குப் பதிலாக அவரது பிரதிநிதியாகப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் இந்நிகழ்வில் பங்கேற்றார். அத்துடன் கலைஞர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் இக்கூத்துப் பெருவிழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.